சென்னை : மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 3வது வாரம் கலந்தாய்வு ஆரம்பமாகும் எனவும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான விண்ணப்பம் இன்னும் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்படும் எனவும் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் cbseresults.nic.in மற்றும் cbseneet.nic.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண், அகில இந்திய ரேங்க் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ அகில இந்திய ரேங்க் பட்டியலை வெளியிடும். அதன் பிறகு மாநில அளவில் அரசு இடஒதுக்கீட்டிற்கான 85% இடத்திற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரம் ஆரம்பமாகும் எனவும், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான விண்ணப்பம் இன்னும் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்படும் எனவும் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு பின்னர்தான் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.