சென்னை : நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தேனி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்கள் அனைத்திலும் ஆரம்பமாகி விட்டன.
நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்று மாணவர்கள் குழம்பிக் கொண்டுள்ளனர். பல்வேறு கட்சிகளும் இந்தத் தேர்வு தேவையில்லை என்று சொல்லி வருகின்றன.
இந்த நிலையில், மறுபக்கம், அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான பயிற்சி மையங்கள் அதாவது கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல கிளம்பி விட்டன.
நீட் மூலம் ஒதுக்கப்படும் இடங்கள்
அரசுக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு என்று 85% இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களில் மாநில அரசுக்கு என ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடும் கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது.
பயிற்சி முகாம்கள்
நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வுக்குத்தான் தற்போது பயிற்சி வகுப்புகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டன.
பயிற்சிக் கட்டணம்
நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு ரூ. 25,000/- முதல் ரூ. 1,00,000/- வரை பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் தராமான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
வகுப்புகள் நடைபெறும் முறை
நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சேரத் தொடங்கிவிட்டனர். 11ம் வகுப்பு மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள். நீட் தேர்வினை ஒவ்வொரு மாணவர்களும் 3 முறை எழுதலாம். நீட் பயிற்சி வகுப்புகள் தினமும் நடைபெறும் வகுப்புகளும் இருக்கின்றன. வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்புகளும் இருக்கின்றன.
சேரலாமா வேண்டாமா
மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிலலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பது நல்லதுதான். ஆனால் அது மட்டும் போதாது மாணவர்கள் நீட் தேர்விற்காக கடினமாக உழைத்துப் படிக்க வேண்டும். 11 மற்றும் 12ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவியர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டம் முழுவதையும் நன்குப் படிக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பகுதிகளில் இருந்து பல்விடைத் தேர்வு வினாக்கள் கேட்கப்படும்.
நீட் தேர்வுப் பாடத்திட்டம்
நீங்கள் ஒவ்வொரு பாடத்தினையும் நன்கு வாசித்து அதிலிருந்து ஒரு மார்க் வினாக்களை குறிப்பெடுத்துக் கொண்டுப் படிக்கும் போது அது மிகவும் உதவியாக இருக்கும். பயிற்சி வகுப்புக்களில் நடத்தப்படும பாடங்களை நன்றாகக் கவனித்துப் படிக்க வேண்டும். மேலும் முக்கியமான பாடங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்காக ஏற்கெனவே இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்துள்ளனர். அதனால் சூட்டோடு சூடாக மறுபடியும் அதே பாடங்களைப் படிக்கும் போது எளிதாக அமையும்.
ஜாலியா படிங்க பசங்களா
படிக்கும் போது பதட்டம் இல்லாமல் மறுபடியும் படிக்கனுமா என்ற எண்ணம் இல்லாமல் அதனை கடினமாகப் பார்க்கமால் எளிதாக விளையாட்டாக எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். மே 7ம் தேதிதான் தேர்வு நடைபெறும். ஏப்ரல் மாதம் முழுவதும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தினமும் ஒரு பாடம் முழுவதையும் வாசித்து அதில் உள்ள 1 மார்க் கேள்விகளைக் குறிப்பெடுத்து வைத்துப் படித்தால் கட்டாயம் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட முடியும்.
பயிற்சி மற்றும் முயற்சி
பயிற்சியும் முயற்சியும் உடையவர்களால் கட்டாயம் எதையும் சாதிக்க முடியும். நீட் தேர்விற்காக மாணவ மாணவியர்களே நீங்கள் கடினமாக உழைக்கும் போதுக் கட்டாயம் தேர்ச்சி நிச்சயம். நீட் முந்தைய வருட வினாத்தாள்களைப் படியுங்கள். மாதிரி வினாத்தாள்களை வைத்துப் படிக்கும் போது உங்களுக்குக் கட்டாயம் ஒரு ஐடியா கிடைக்கும். எந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் வருகிறது எப்படி வரும் என அறிந்து கொள்ள முடியும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. முடியாது என்று நினைப்பதை விட முயற்சி செய்து நல்லது. கடின உழைப்பு கட்ஆப் மார்க் எடுக்க வைக்கும்.
தைரியத்தோடு படியுங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுடையதே!