நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ! தனக்கான வாய்ப்பு கிடைக்குமா? என்ற பயத்தில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அன்று நீட் தேர்வால் பல ஏழை மாணவர்களின் கனவுகள் கலைந்து போகும் எனக் கூறி தற்கொலை செய்துகொண்ட அனிதாவைப் போல, இன்று கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாணவி
கோவை மாவட்டம், ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரனின் என்பவரது மகள் சுபஸ்ரீ (19). இவர் கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காகத் தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
சுபஸ்ரீ
மாணவி சுபஸ்ரீ, கடந்த வருடமே நீட் தேர்வு பங்கேற்றுள்ளார். ஆனால், அதில் தேர்ச்சி பெறாத நிலையில் தொடர்ந்து பயிற்சி வகுப்பிற்குச் சென்று படித்து வந்துள்ளார்.
கொரோனாவால் தேர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில், கடந்த மே மாதம் நீட் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றின் கட்டுப்பாட்டு நடவடிக்கையாகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இத்தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கில்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
மன வேதனையில் சுபஸ்ரீ
இதனிடையே, இரண்டு வருடங்களாக நீட் தேர்விற்கு தன்னை தயார்ப்படுத்தி வந்த சுபஸ்ரீ, இந்த ஆண்டு தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள்? தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா உள்ளிட்டு மனக் குழப்பத்திலேயே இருந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்ட விசயம் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடரும் நீட் உயிரிழப்புகள்
மருத்துவத் துறையில் பொது நுழைவுத் தேர்வாக நீட் கட்டாயம் வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தி வந்தாலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு இது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. அன்று நீட் தேர்வினால் அனிதா எனும் மாணவி உயிரிழந்தது முதல் இன்று சுபஸ்ரீ வரையில் இன்னும் பல உயிர்களைப் பலி வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக உள்ளது.