நாடு முழுவதும் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்து சமீபத்தில் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டது.
முன்னதாக, தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதில் 15 சதவிகித இடங்கள், அதாவது 547 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கொடுக்கப்பட்டு விடும்.
இந்த 15 சதவிகித இடங்கள் மற்றும் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இடங்களுக்கு 2020-21-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான இயக்குநரகம் கலந்தாய்வினை நடத்துகிறது.
எனவே, முதல்கட்ட கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் www.mcc.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.
அதனைத் தொடர்ந்து, தேர்வர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியை அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். இதனையடுத்து தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யும் பணி நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதி நடைபெறும். தொடர்ந்து, இட ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான விவரங்கள் நவம்பர் 5-ம் தேதியன்று வெளியிடப்படும்.