12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேர வேண்டும் எனில் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
வரும் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET UG 2020) அடுத்த ஆண்டு மே 3ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு கடந்த 2ம் தேதியன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தகவலை இங்கே காணலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க என இணையதளத்தில் பல்வேறு இணைய முகவரிகள் உள்ளன. அதனை மட்டுமே நம்பி விண்ணப்பிக்காமல் நீட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ntaneet.nic.in/ ஆகும். விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் இந்த இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
நீட் 2020 விண்ணப்பம்
தேசிய தேர்வு முகமையின் முகப்புப் பக்கத்தில் (Home Page) நீட் தேர்வு குறித்த முன்னுரை அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமை குறித்து தெரியாதவர்கள், முன்னுரையை ஒரு முறை கவனமாக வாசித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க, https://www.ntaneet.nic.in/ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தின் அடியில், 'Fill Applicaion Form' என்று பகுதியை கிளிக் செய்யவும்.
தேர்வு வழிமுறைகள்
'Fill Applicaion Form' பக்கத்தில் நீட் தேர்வுக்கான வழிமுறை, விண்ணப்பிக்கும் முறை, நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 31.12.2003க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். ஆன்லைன் மூலமாக மட்டுமே நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நீட் 2020 ஆன்லைன் விண்ணப்பம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் வாசித்த பிறகு, கீழே உள்ள 'I have read and understood all the instructions mentioned above and in the information bulletin' என்பதை டிக் செய்ய வேண்டும். பின்பு, Proceed To Apply Online NEET (UG) 2020 என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீட் 2020 புதிய விண்ணப்பதாரர்
அப்பக்கத்தில் நீட் 2020 தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியாகும். அதில், விண்ணப்பதாரர் பெயர், தாய் பெயர், தந்தை பெயர், வகுப்பு, பிறந்த தேதி, பாலினம், மாற்றுத்திறனாளி எனில் அதற்கான விபரங்கள் என அனைத்தையும் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக மாணவரின் விபரங்கள், அவர்களது கல்விச் சான்றிதழ்களில் எவ்வாறு உள்ளதோ அதன்படியே இருக்க வேண்டும்.
நீட்டுக்கு ஆதார் அவசியம்
விண்ணப்பப்படிவத்தில் தேசியம், மாநிலம், மாணவரின் அடையாள அட்டை விபரங்கள், கைபேசி எண், இமெயில் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பிறகு, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இமெயில், மொபைல் நம்பர் மூலமாகவே தெரிவிக்கப்படும் என்பதால் அதனை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
நீட் தேர்வு விண்ணப்பம்
நீட் 2020 தேர்வு விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்த பிறகு 'Preview & Next' என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்த விபரங்கள் அனைத்தும் முழுமையாக திரையில் காட்டப்படும். அவற்றை மீண்டும் ஒரு முறை கவனமாக வாசித்துக் கொள்ளவும். தகவல்கள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இதுதான் உங்கள் பாஸ்வேர்டு!
இதற்கு அடுத்ததாக உங்களுடைய நீட் பதிவிற்கு கடவுச்சொல் (Password) உருவாக்க வேண்டும். பாஸ்வேர்டு கட்டத்துக்கு அடுத்ததாக, பாதுகாப்பு கேள்விகள் சில இருக்கும். அதனை தேர்வு செய்து, நீங்கள் நன்கு அறிந்த கேள்விக்கு பதில் அளித்தல் வேண்டும். இதுவும் உங்கள் நீட் பதிவிற்குக் கடவுச்சொல்லாகப் பயன்படும். பின்பு, 'OTP Verfication' என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை அப்படியே டைப் செய்து Submit கொடுக்க வேண்டும். தற்போது உங்களுடைய நீட் 2020 விண்ணப்பப் பதிவு தயார். இப்போது திரையில் காட்டப்படும் உங்களது எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நான்கு நிலைகளை விண்ணப்பிக்க வேண்டும்
நீட் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது மொத்தம் நான்கு நிலைகள் இருக்கும். விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் பதிவேற்றத்தை பரிசோதித்தல், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல், விண்ணப்பப் பதிவு நிறைவு செய்தல் ஆகியவை ஆகும். இவற்றில் நீங்கள் இப்போது முதல் நிலையான விண்ணப்பப் பதிவு செய்துள்ளீர்கள். இதன் சுருக்கமான விபரங்கள் திரையில் காட்டப்படும்.
விருப்ப மொழியில் நீட் தேர்வு
விண்ணப்பப் பதிவின் அடுத்தகட்டமாக எந்த மொழியில் நீட் தேர்வு எழுத வேண்டும் என கேட்கப்படும். விண்ணப்பதாரர் இதில் தங்களுடைய விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ள முடியும். தமிழ் மொழியை தேர்வு செய்தால், நீட் தேர்வுகள் தமிழில் இருக்கும். கேள்விகள் தமிழ் மொழியில் கேட்கப்பட்டிருக்கும். ஆங்கிலம் தேர்வு செய்தால், கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கேட்கப்படும்.
தேர்வு மையங்களையும் தேர்வு செய்யலாம்
அதற்கு அடுத்ததாக எந்த நகரத்தில் தேர்வு மையம் வேண்டும் என்று கேட்கப்படும். இதில் தங்களுக்கு அருகாமையில் உள்ள நகரங்களை அடுத்தடுத்து தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே, தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.
பள்ளி கல்வி விபரங்கள்
தேர்வு மையத்தை தேர்வு செய்த பிறகு அடுத்ததாக மாணவர்கள் தங்களுடைய கல்வி விபரங்களை அளிக்க வேண்டும். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த விபரங்களை ஒவ்வொன்றாகக் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பள்ளி பெயர், தேர்ச்சி பெற்ற ஆண்டு, பள்ளியின் இருப்பிடம், அந்த வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், தேர்வு எண் என அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
நிரந்தர முகவரி
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பூர்த்தி செய்த பின், உங்களுடைய நிரந்தர இருப்பிட முகவரியை பதிவு செய்ய வேண்டும். வீட்டு எண், தெரு, நகர், பின்கோடு, மாநிலம், மாவட்டம், இமெயில் முகவரி, டெலிபோன் நம்பர் என அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பெற்றோரின் கல்வித்தகுதி, வேலை, வருடாந்திர ஊதியம் ஆகியவை தனித்தனியே நிரப்ப வேண்டும்.
நீட் தேர்விற்கான ஆடை விதிமுறைகள்
நீட் தேர்வின் போது முக்கிய அங்கமாக இருப்பது ஆடை விதிமுறைகள். நீட் தேர்வின் போது ஆடை விதிமுறைகள் தொடர்பான விபரங்கள் தெரியுமா என்று விண்ணப்பிக்கும் போதே கேட்கப்படும். அதனை டிக் செய்து கொள்ள வேண்டும். இறுதியாகப் பாதுகாப்பு குறியீடு கொடுத்து விண்ணப்பப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பப் படிவம் தயார்
இறுதியாக நீங்கள் அளித்துள்ள விபரங்கள் அனைத்தையும் சுருக்கமாகத் திரையில் காட்டப்படும். தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும். ஒரு வேளை ஏதேனும் பிழை இருப்பின் 'Back' என்பதை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளவும். அனைத்தும் சரியாக இருந்தால், பழையபடி OTP கொடுத்து, விண்ணப்பப் பதிவை பூர்த்தி செய்ய வேண்டும்.
மீண்டும் மாற்ற முடியாது
தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு, நீங்கள் அளித்த விபரங்களில் சிலவற்றை மாற்ற முடியாது. உதாரணத்திற்கு நீட் தேர்வு விருப்ப மொழி, தேர்வு மையங்கள், உங்களுடைய ஒப்புதல் ஆகியவற்றை மாற்ற முடியாது.
சான்றிதழ் பதிவேற்றம்
மேற்குறிப்பிட்ட அனைத்தும் விண்ணப்பித்த பிறகு அடுத்தகட்டமாக விண்ணப்பதாரர் புகைப்படம், கையெழுத்து, சான்றிதழ் பதிவேற்றும் பகுதி வரும். இதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்றுவது நல்லது. மேலும், கையெழுத்து, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், இடது கை பெருவிரல் ரேகை, அஞ்சல் தலை அளவு புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இவை தயாராக இல்லாத பட்சத்தில், 'Upload Later' என்பதை கொடுத்து பிறகு பதிவேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.
விண்ணப்பக் கட்டணம்
நீட் தேர்வு 2020 விண்ணப்பிப்பதில் மூன்றாவது பகுதி விண்ணப்பக்கட்டணம் செலுத்துவது ஆகும். விண்ணப்பக்கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜனவரி 1. மாணவர்கள் கடைசி நாள் வரையில் காத்திருக்காமல், விண்ணப்பப் பதிவு முடிந்ததும், உடனே விண்ணப்பக் கட்டணம் செலுத்திவிடுவது நல்லது. ஆன்லைனில் செலுத்த முடியாத விண்ணப்பதாரர் வங்கி செலானை பிரிண்ட் அவுட் எடுத்து, நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.