சென்னை: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மைய மாற்றத்திற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு நீட் தேர்வாகும்.
இந்த ஆண்டு மொத்தம் 11.35 லட்சம் பேர் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், 88 ஆயிரத்து, 478 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
கால அவகாசம் நீட்டிப்பு
நாடு முழுவதும், 103 நகரங்களில், 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மேலும் ஒரு நகரத்தை, சி.பி.எஸ்.இ., இணைத்துள்ளது. அதனால், தேர்வு மைய நகரத்தை தேர்ந்தெடுக்கும் கால அவகாசம், செவ்வாய்கிழமை உடன் முடிய இருந்த நிலையில், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதித் தேர்வு
சிபிஎஸ்சி நாடு முழுவதும் நாடு முழுவதும் நீட் தேர்வினை நடத்துகிறது. இது அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் ஒப்புதல் படி நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இந்தத் தகுதி தேர்வு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.
இட ஒதுக்கீடு
நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
நீட் தேர்வு நடத்தப்படும் மொழிகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் தேர்வு தமிழ் உட்பட 8 மொழிகளில் நடக்க உள்ளது. (ஹிந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடக்க விருக்கிறது).
உச்சநீதிமன்ற ஆணை
உச்ச நீதி மன்ற ஆணையின்படி தனியார் கல்லூரிகள் உள்ள இட ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களும் நீட் தேர்வு மூலம் கடந்த ஆண்டு (2016-17) நிரப்பப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. மொத்தம் 180 ஆப்ஜக்ட்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும் இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.