சென்னை : அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுடைய வீட்டில் இருந்து ஒரு குழந்தை கூட அரசுப்பள்ளியில் சேர்க்கப்பட வில்லை. அரசு வேலை வேண்டும் ஆனால் அரசுப்பள்ளி வேண்டாமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அரசுப்பள்ளியில் காலிப்பணியிடம் என்பது குழந்தைகள் சேர்க்கையை பொறுத்துத்தான் அமையும். குழந்தைகள் சேர்க்கை இல்லையென்றால் காலிப்பணியிடம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
கல்வித்துறையில் காலிப்பணியிடம் என்பது மற்ற துறைகளைப்போல எளிதாக உருவாக்க முடியாது. குழந்தைகள் இல்லையென்றால் ஆசிரியர்ப் பணி காலியிடமும் இல்லை.
மாணவர் சேர்க்கை
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ள 8 லட்சம் பேர்களும் ஆளுக்கு ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்தால் 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் 26,666 நபர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. வருடவருடம் மாணவர் சேர்கை குறைந்துதான் வருகிறது.
அரசுப்பள்ளிகள்
ஆனால் இன்றைய நிலை என்ன? என்றால் வருடவருடம் 500 முதல் 1000 பணியிடம் மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் அரசுப்பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நம்பிக்கை இல்லா உங்களிடம் அரசுப்பள்ளியில் உங்களை நம்பி யார் அவர்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள்? அரசுப்பள்ளியில் வேலைப் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வருவதில்லை.
வழிமுறைகள்
அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு அரசுப்பளிளியும் அரசும் எடுக்கவேண்டும். தங்களுயை பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று அங்கு பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய வயதில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து அரசுப் பள்ளியில் சேர்க்குமாறும் அதன் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.
தமிழக அரசு
மேலும் தமிழக அரசு, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் பாடத்திட்டங்களில் மாற்றத்தையும், பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும். கற்பித்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து ஒரு குழந்தையையாவது அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் அரசு வேலைப் பார்ப்பவர்களும், புதிதாகபணியில்
அமர்த்தப்படுபவர்களும் தங்கள் வீட்டிலிருந்து ஒரு குழந்தையையாவது அரசு பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என அரசு சட்டம் இயற்றும் போது கட்டாயம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளின் சேர்கையை அதிகப்படுத்த முடியும்.
மாற்றம் தேவை
வெளிநாடுகளில் பெரும்பாலும் அரசே பள்ளி கல்லூரிகளை பொறுப்பேடுத்து நடத்துகிறது. ஆனால் இந்தியாவில் தான் அதிகமான தனியார் பள்ளி கல்லூரிகள் காணப்படுகிறது. அதே போல் நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகள் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். அதில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். கல்வி என்பது தனியார் கையில் வியாபாரமாக மாறிவருகின்ற இன்றையக் காலக்கட்டத்தில் கட்டாயம் ஒரு மாற்றம் தேவை.