சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஆக.20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனறி முதல் கட்டத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஆகஸ்ட் 31 வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். தேவையான ஆவணங்களுடன் அந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்யவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-க்குள் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் ரூ.50 கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்த்து அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.