சென்னை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஎஸ்இ தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்களும் உயர்கல்வியைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை 10-ம் வகுப்பு மாணவர்கள் எழுத முடியும். உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக நவம்பர் 8-ஆம் தேதி தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த விண்ணப்பங்களை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த விண்ணப்பங்களை www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.