மத்திய அரசின் எந்த ஒரு பணிகளுக்கும் இனி ஒரே தேர்வு தான் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, மத்திய அரசு மற்றும் பொதுத் துறை வங்கி பணியிடங்களுக்கான தேர்விற்கு ஒரே பொது தகுதி தேர்வு (சிஇடி) கொண்டுவரப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான National Recruitment Agency என்ற ஏஜென்சியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
ஒரே தேசம், ஒரே தேர்வு
மத்திய அரசுப் பணிகளுக்கு ஆண்டு தோறும் குரூப் பி, குரூப் சி போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், நாடு முழுவதும் இருந்து சுமார் 3 கோடி பேர் பங்கேற்கின்றனர்.
பணிகளுக்கு ஏற்ப தேர்வு வாரியம்
அவ்வாறாக மத்திய அரசின் பணிகளுக்கு வெவ்வேறு தேர்வு வாரியத்தின் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் தற்போது, தேசிய பணியாளர் தேர்வு ஏஜென்சி என்ற ஒற்றை வாரியத்தின் மூலம் அரசுப் பணியாளர் தேர்வு நடைபெறும். இது ஒரு மிக முக்கியமான சீர்திருத்தம் என அமைச்சரவை செயலாளர் சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
இனி அலைச்சல் இருக்காது
இந்த புதிய திட்டம் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங், "பணியாளர் தேர்வு, பணியாளர் பணியிட உத்தரவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணி நடைமுறைகள் இனி எளிமையாகும். அதே போல, ஏழைகள் மற்றும் பெண்கள் தேர்விற்காக அதிக தொலைவிற்குப் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த நடைமுறை எளிமையாக்கும் என்று தெரிவித்தார்.
கட்டணத்தில் வேறுபாடு இருக்கும்
ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரே மாதிரி தகுதி இடங்கள் கொண்ட பல்வேறு மத்திய அரசில் பணிகள் இருந்தாலும், வெவ்வேறு வகையான தேர்வுகளை எழுத வேண்டிய தேவை இருப்பதால் ஒவ்வொரு தேர்வுக்கும், தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆயிரம் தேர்வு மையங்கள்
தற்போது, வெவ்வேறு தேர்வு மையங்களுக்குப் பயணப்படுவதற்கு அவசியம் உள்ளது. ஆனால், இந்த ஒரே தேர்வு முறை அமல் படுத்துவதன் மூலம் பல்வேறு செலவுகள் மற்றும் அலைச்சல் குறையும். முதல்கட்டமாக நாடு முழுக்க ஆயிரம் தேர்வு மையங்களை அமைத்து பொது தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேர்வுகள் எப்படி நடக்கும்?
மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதலின் படி, குரூப் பி மற்றும் குரூப் சி (தொழில்நுட்பமற்ற) பணிகளுக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய என்.ஆர்.ஏ பொது தேர்வு நடத்தும். என்.ஆர்.ஏ ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் நிதி சேவைகள் துறை, பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.