கொரோனா நோய் தொற்றலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி (இன்று) வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கை மே 3ம் தேதி வரையில் நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நான்காவது முறையாக தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா மிகவும் தைரியத்துடன் எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்.
ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் நிலை குறித்து ஆராயப்படும். கொரோனா நோய் தொற்றல் சிகிச்சைக்காக ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன.
கொரோனா நோய் தொற்றலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்பான வழிபாட்டு நெறிமுறைகள் நாளை அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.