சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல துறைகளில் பேரிசியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 30 சதவிகித பேராசிரியா் காலியிடங்களுடன் சென்னைப் பல்கலைக்கழகம் இயங்கி வருவதால், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் '(நாக்) ஏ' கிரேடு தரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக் ஏ தரம்
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ‘நாக்' அங்கீகாரம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைபடி, இந்த நாக் அங்கீகாரம் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
7 வகையான நிபந்தனைகள்
‘நாக்' அமைப்பானது, உயா் கல்வி நிறுவனங்களை 7 வகையான நிபந்தனைகளின் படி ஆய்வு செய்து அதனடிப்படையில் தர நிர்ணயம் செய்கிறது. அதாவது, கல்வித் திட்டம், கற்றல் மற்றும் கற்பித்தல், மதிப்பிடுதல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், கற்றலுக்கு உதவும் வசதிகள், மாணவர்களுக்கு உதவும் திட்டங்கள், நிர்வாகம் மற்றும் தலைமைப் பண்பு உள்ளிட்டு 7 நிபந்தனைகளின் கீழ் உயா் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
Madras University NAAC rankings
நாக் அமைப்பின் படி 3.51 முதல் 4 புள்ளிகள் வரையில் பெறும் கல்வி நிறுவனத்திற்கு ஏ++ கிரேடு வழங்கப்படும். 3.26 முதல் 3.50 புள்ளிகளைப் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ+ கிரேடும், 3.01 முதல் 3.25 வரை பெற்றால் ஏ கிரேடு, 2.76 முதல் 3 புள்ளிகள் பெற்றால் பி++ கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெற்றால் பி+ கிரேடு, 2.01 முதல் 2.50 வரை பெற்றால் பி கிரேடு, 1.51 முதல் 2 புள்ளி வரை பெற்றால் சி கிரேடு வழங்கப்படும்.
தகுதியற்ற பல்கலைக் கழகம்
மேலே குறிப்பிட்ட புள்ளி விபரங்களில், 1.5 புள்ளிகளுக்குக் கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு டி கிரேடு வழங்கப்படும். இந்த டி கிரேடு பெறும் கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் அளிக்கப்படாத கல்வி நிறுவனமாக அறிவிக்கப்படும்.
சென்னைப் பல்கலைக் கழகம்
அவ்வாறு தற்போது சென்னைப் பல்கலைக்கழகம் -ஏ- கிரேடு அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 200 பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அவை நிரப்பப்படாமலேயே சென்னைப் பல்கலைக்கழகம் இயங்கி வருவதால், ஏ கிரேடு அங்கீகாரத்தை இழந்து -பி- கிரேடுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக பேராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மானியமும் ரத்து
அவ்வாறு ‘நாக்- ஏ' கிரேடு அங்கீகாரத்தை இழக்கும் பல்கலைக்கழகத்திற்கு மானியக் குழுவின் நிதி ரத்து செய்யப்படும். ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள சென்னை பல்கலைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளிடமிருந்து கிடைத்துவரும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்ற அனைத்து விதமான நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுவிடும் என்கின்றனர் அப்பல்கலைக் கழக பேராசிரியர்கள்.
மத்திய அரசின் புதிய நிபந்தனை
காலிப் பணியிடத் தோ்வின்போது, பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளையும் ஒரே யூனிட்டாக கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தவேண்டும் என மத்திய அரசு புதிய நிபந்தனையில் உள்ளது. இதனைக் காரணம் காட்டியே பேராசிரியர் நியமனம் தாமதமாவதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசு அனுமதி
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே பின்பற்றி வரும் 200 பாயின்ட் ரோஸ்டா் முறைப்படி ஒவ்வொரு துறையையும் தனித் தனி யூனிட்டாக கணக்கில் கொண்டு பேராசிரியா் நியமனத்தை மேற்கொள்ளலாம். மத்திய அரசின் நிபந்தனையை பின்பற்றத் தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் கடந்த செப்டம்பா் மாதமே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், காலிப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் பேராசிரியர்கள்.
யுஜிசி எச்சரிக்கை
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் உயா் கல்வி நிறுவனங்கள் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாத கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
காலக் கெடுவும் முடிந்தது
யுஜிசி சுற்றறிக்கையில் அனைத்து பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்புக் கல்லூரிகளும் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுதொடா்பான விவரங்களை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு தெரிவித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் காலியிடங்களை நிரப்ப சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
துணைவேந்தர் பதில்
இதனிடையே, யுஜிசி, நாக்-ஏ விவகாரத்தில் பேராசிரியா் காலியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












