சென்னை: வறுமை நிலையில் உள்ள சிறுபான்மையின பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் மேல்நிலைக்கல்வியை தொடர்வதற்கு வசதியாக பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டமாக மத்திய அரசு மெüலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ. 12 ஆயிரம், இரு தவணைகளாக பிளஸ் 1 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 1,707 சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1 பயில்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்துடன், பள்ளி சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைக்க வேண்டும். இத்திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்கள் www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவிகளின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று, சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிறசேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுகளுடன் கையொப்பம் செய்து, விண்ணப்பப்படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2-ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன், செயலர், மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு, செல்ம்ஸ் போர்டு சாலை, புதுதில்லி-110 055 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.