மும்பை பல்கலைக் கழகம் கடந்த ஆண்டில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 97 ஆயிரம் மாணவர்களில் 35,000 பேரை தவறுதலாக பெயில் ஆக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலரான விஹார் துருவ் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மும்பைல் பல்கலைக் கழக மறுமதிப்பீடு குறித்து கேட்டுப்பெற்ற விவரங்களின் மூலம் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு மும்பை பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்வுகளில் விடைத் தாள்களுக்கு மறுமதிப்பீடு செய்ய 97,313 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். முதல் பருவத்தேர்வுக்குப் பின் 49,596 மாணவர்கள் 85,068 தாள்களில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 16,739 மாணவர்கள் பல்கலைக் கழகத் தரப்பில் தவறுதலாக பெயில் ஆக்கப்பட்டுள்ளனர். அதேப்போல, அடுத்த பருவத் தேர்வில் 47,717 மாணவர்கள் 76,086 தாள்களுக்கு மறுமதிப்பீடு கேட்டு
விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 18,254 பேர் பெயிலானதாக தவறுதலாக முடிவு வந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 75,000 மாணவர்களுக்கும் மேல் மறுமதிப்பீட்டில் பெயில் செய்யப்பட்டுள்ளதாக தவறுதலாக முடிவு வந்துள்ளது. இதனால் மும்பை பல்கலைக் கழகம், மாணவர்களிடம் நம்பகத்தன்மையை இழந்து வருவதாக சமூக ஆர்வலர் விஹார் துருவ் விமர்சித்துள்ளார்.