புதுடெல்லி: விரைவில் மும்பை பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சஞ்சய் தேஷ்முக் கூறியதாவது:
விரைவில் ஆன்-லைன் படிப்புகளை எங்களது பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யவுள்ளோம். இன்னும் ஓராண்டுக்குள் இந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
மேலும் மும்பை பல்கலைக்கழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
சமூக அறிவியல், இயற்கை அறிவியல், இசை உள்ளிட்ட பாடங்கள் ஆன்-லைனில் முதலில் அறிமுகம் செய்யப்படும். இதற்காக விர்ச்சுவல் எஜுகேஷன் நெட்வொர்க் (விசாட்) உதவியை நாடியுள்ளோம்.
மேலும் 40 விர்ச்சுவல் வகுப்பறைகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பாடங்கள் நடத்தப்படுவதும் செயற்கைகோள் துணையுடன் செய்யப்படும்.
இதற்காக எம்கேசிஎல் நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். மும்பை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ள 6 லட்சம் மாணவர்களின் விவரங்கள் டிஜிட்டலில் பதிவேற்றப்பட்ட பிறகு இந்த ஆன்-லைன் படிப்புகள் தொடங்கப்படும் என்றார் அவர்.