சென்னை: பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு பரபரப்பாக கவுன்சிலிங் நடந்து வரும் வேளையில் இ.சி.இ. பிரிவுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் இ.சி..இ. பிரிவையே தேர்வு செய்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்திலுள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங்கை நடத்தி வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 560-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு அட்மிஷனை நடத்தி வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். ஒற்றைச் சாளர முறை மூலம் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
15 நாட்கள் நிறைவு
ஜூன் 28-ம் தேதி தொடங்கி 15 நாட்கள் கவுன்சிலிங் முடிந்துள்ளது. பொதுப் பிரிவில் பி.இ. கவுன்சிலிங் தொடங்கி 12 நாள்கள் முடிவுற்ற நிலையில், இசிஇ பிரிவே அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக இருந்து வருகிறது.
9,138 பேர் விருப்பம்
இந்தப் பிரிவை இதுவரை 9,138 பேர் தேர்வு செய்து, கல்லூரியில் சேர கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
44,220 பேர் தேர்வு
பி.இ. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க நேற்று வரை மொத்தம் 57,954 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 44,220 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 13,531 பேர் கவுன்சிலிங்குக்கு வரவே இல்லை.
203 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை
203 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
1.48 லட்சம் இடங்கள் காலி
மாணவ, மாணவிகள் தேர்வு செய்த இடம் போக, தற்போது, 1 லட்சத்து 48 ஆயிரத்து 896 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. படிப்புப் பிரிவுகளைப் பொருத்தவரை இசிஇ பிரிவே அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை 9,138 பேர் இந்தப் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர். இ.சி.இ. பிரிவு படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைப்பதால் இந்தப் படிப்பின் மீது மோகம் அதிகரித்து வருவதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவி்த்தனர்.
2-வது இடம் மெக்கானிக்கல் பிரிவுக்கு...
இ.சி.இ. பிரிவுக்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் பிரிவை 8,723 பேரும், சிஎஸ்இ பிரிவை 6,100 பேரும், இஇஇ பிரிவை 5,389 பேரும், சிவில் பிரிவை 4,978 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர்.
19,370 பேர் முதல் தலைமுறை பட்டதாரி
இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 19,370 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இம்மாத இறுதி வரை பி.இ. கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. அநேகமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.