சென்னை: தமிழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை விர்ரென்று உயர்ந்துள்ளது. இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்திலுள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஒற்றைச் சாளர முறை
ஒற்றைச் சாளர முறையில் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
விளையாட்டுப் பிரிவு
கடந்த மாதம் 28-ம் தேதி பி.இ. அட்மிஷன் தொடங்கியது. முதல் 3 நாள்களில் விளளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அட்மிஷன் முடிந்த பிறகு பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்கியது.
பொதுப் பிரிவு
சரியாக ஜூலை 1-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங் கோலாகலமாகத் தொடங்கியது. தற்போது கவுன்சிலிங் தொடங்கி 14 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
14 நாட்களே பாக்கி
என்ஜினீயரிங் படிப்புகளுக்காக நடத்தப்படும் கவுன்சிலிங் முடிய இன்னும் 14 நாட்களே பாக்கி உள்ளன. கடந்த 14 நாட்களில் 51,498 பேர் பி.இ, படிப்புகளைத் தேர்வு செய்து அதற்கான சேர்க்கைக் கடிதங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
பி.இ., பி.டெக். கவுன்சிலிங்கில் பங்கேற்க ஜூலை 12-ம் தேதி வரை மொத்தம் 68,363 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 51,498 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
16 ஆயிரம் பேர் வரவில்லை
16,632 பேர் கவுன்சிலிங்குக்கே வரவில்லை. ஆனால் 233 பேர் கவுன்சிலிங்குக்கு வந்தபோதிலும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
1.41 லட்சம் இடங்கள் காலி
தற்போது, 1 லட்சத்து 41 ஆயிரத்து 618 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. வரும் 28-ம் தேதி வரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.