சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளைப் போலவே சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும் இப்போது மவுசு கூடி வருகிறது. இந்தப் படிப்புகள் பயில்வதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளர்.
நடப்புக் கல்வியாண்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வந்தன. மொத்தம் 5150 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தப் படிப்புகளுக்கு வந்த விண்ணப்பங்கள் தொடர்பாக தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியது:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று வரை மொத்தம் 5,075 விண்ணப்பங்கள் இயக்ககத்துக்கு வந்துள்ளன.
சில கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் வரவில்லை. அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்த பின்பு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து கவுன்சிலிங் நடத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் 15 தினங்களில் வெளியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.