சென்னை: நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 6-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்தப் படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 7,578 இடங்கள் உள்ளன. விண்ணப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகப் பெற்றுக் கொள்வதோடு இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படிப்புகளுக்கு மொத்தம் 23,495 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதி மாலை 5 மணி வரை காலக்கெடு என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 19-ம் தேதி மாலை வரை நேரடியாகப் பெற்றவர்கள் 19,257 பேரும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த 483 பேரும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். ஆக... துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 19,740 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் அதிகாரிகள் வெளியிடவுள்ளனர்.