பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோர் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று (அக்டோபர் 11) மற்றும் நாளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது எவ்விதமான ஒப்பந்தங்களோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கையெழுத்தாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சந்திப்பானது இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கும் நடுவேயான தொடர்பை வலுப்படுத்தவும்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோரது வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 13ம் தேதி வரையில் மூன்று நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.