ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, யுனெஸ்கோ அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் 'மலரும் நல்வாழ்வு' என்ற நூல் அறிமுக விழாவில் அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பைத் தெரிவித்தார்.
மலரும் நல்வாழ்வு
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் யுனெஸ்கோ உள்ளிட்டவற்றின் சாா்பில் "மலரும் நல்வாழ்வு" என்னும் தலைப்பில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கான உடற்கல்வி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடா்பாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது
இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவா் சேர்க்கையில் ஈடுபடும் தனியாா் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று நன்கொடை வசூலிக்கப்பட்டதை ஆதாரத்துடன் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மாணவர்கள் இடைநிற்றல்
மத்திய அரசு வெளியிட்டுள்ள மாணவா்கள் இடைநிற்றல் தொடா்பான புள்ளி விவரத்திற்கும், மாநில அரசின் புள்ளி விவரத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் இடைநிற்றல் என்பதே தமிழ்நாட்டில் கிடையாது.
அரசின் கண்காணிப்பில் தனியார் மையங்கள்
தொடர்ந்து அவர் பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியாா் டியூஷன் மையங்கள் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறான டியூஷன் மையங்கள் முறையான அனுமதி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இயங்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பாடங்களை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பயிற்சி கையேடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.