சென்னை: மருத்துவ கட் ஆப் இந்த முறை குறையும் நிலையில் உள்ளதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
பிளஸ் 2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த வருடம் பிளஸ் 2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும்.

இதனால் மருத்துவ கட் ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இதனால் இந்த ஆண்டு 197.5 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியாமல் போன 1266 மாணவர்கள் இந்த வருடம் சேர முயற்சி செய்கின்றனர். மருத்துவ கட் ஆப் மார்க் குறைவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் எஞ்சினியரிங், பல் மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை தேர்வு செய்து ஒரு ஆண்டு படித்து வந்த போதிலும் 0.5 கட் ஆப்பில் அரசு மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள்.
அதனால் பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தற்போது பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












