சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் வசதிக்காக 12 எல்.இ.டி திரைகள், 5 கணினிகள், நிழற்கூடம், உணவு விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
19ம் தேதி முதல் கலந்தாய்வு
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் 2015-16 ஆம் ஆண்டிற்கான மருத்துவக்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பல் மருத்துவக்கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்குகளில் நடைபெறவுள்ளது.
பெரிய பெரிய எல்இடி திரைகள்
கூட்ட அரங்குகளில் மிகப்பெரிய அளவில் 4 எல்.இ.டி. திரைகளும், அரங்கிற்கு வெளியே 4 எல்.இ.டி திரைகளும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமரும் நிழற்கூடத்தில் 4 எல்.இ.டி திரைகளும் மொத்தம் 12 எல்.இ.டி திரைகள் அமைக்கப்படவுள்ளன.
தற்காலிக வங்கி வசதி
மேலும் மாணவர்கள் வரைவோலை எடுக்கவும், பணம் செலுத்தவும் தற்காலிகமாக கணினி மயமாக்கப்பட்ட வங்கி வசதியும் செய்யப்படவுள்ளது. ஒரே நேரத்தில் 5 மாணவர்கள் அமர்ந்து தங்களின் கல்லூரியை தேர்வு செய்ய ஏதுவாக 5 கணினிகளும் அமைக்கப்படவுள்ளது.
பெரிய பந்தல்
மேலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களுடன் வரும் பெற்றோர்கள் அமர்வதற்கு மருத்துவமனையின் வெளிப்பகுதியில் மிகப்பெரிய பந்தல், 4 எல்.இ.டி திரை வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி, சிற்றுண்டி விடுதி ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
கேஎம்சியில் இந்தாண்டு கிடையாது
சென்ற ஆண்டு வரை இந்த கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டும், கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வசதிகளை கருத்தில் கொண்டும் இவ்வாண்டிற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்குகளில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நேரில் பார்வை
கலந்தாய்வுக்கான முன் ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப மருத்துவக்கல்வி இயக்குநர் மருத்துவர் எஸ். கீதாலட்சுமி மற்றும் தேர்வுக்குழு செயலாளர் மருத்துவர் உஷா சதாசிவம் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஜெயலலிதா மருத்துவமனை
உண்மையில் அரசு பன்னோக்கு மருத்துவமனையானது புதிய சட்டசபையாக முன்பு செயல்பட்டது. பின்னர் திமுக ஆட்சி அகன்ற பின்னர் இதை மருத்துவமனையாக ஜெயலலிதா அரசு மாற்றியது என்பது நினைவிருக்கலாம்.