சென்னை: வருங்கால டாக்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் திங்கள்கிழமை(ஜூன் 15) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் சேர நினைப்பதென்னவோ டாக்டர் மற்றும் பல் டாக்டர் படிப்புகள் என்றாலும் அதற்கான இடங்கள் தமிழகத்தில் குறைவே. இதுவரை 32,184 பேர் மருத்துவப் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக அரங்கில் வெளியிடப்படும். மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி முன்னிலையில் தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படும். ஜூன் 15 நண்பகல் 12 மணிக்கு மேல் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். நேரில் வர விரும்பும் மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தில் இந்த முடிவுகளை அறியலாம். நேரில் வர முடியாதவர்கள் இணையதளம் மூலமாக பார்த்துக்கொள்ளலாம்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 32,184 மாணவர்களுக்கு ஏற்கெனவே சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களான உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றில் மாணவர்கள் பெற்ற மறு கூட்டல்-மறு மதிப்பீடு மதிப்பெண்கள் அடங்கிய சி.டி. மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு நேற்று வந்து சேர்ந்து விட்டது.
இதையடுத்து எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தே திங்கள்கிழமை தரவரிசைப்பட்டியல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications












