டெல்லி: மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது.
நமது நாட்டில் சில மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் பொது நுழைவுத் தேர்வு(சிஇடி) முறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றமானது, இனி தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் அது வரும் கல்வியாண்டிலேயே அமலாக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தது.
இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆனால் இனி மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வழி என்ற நிலை உருவாகியுள்ளது. 2016-17-ம் கல்வியாண்டில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்.
12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
ஆனால் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வரை நீட் தேர்வு மட்டுமே இனி ஒரே வழி. இல்லாவிட்டால் மருத்துவப் படிப்புகளில் ஏழை, எளிய மக்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் சேர முடியாத நிலை ஏற்படும்.
நீட் தேர்வு சிபிஎஸ்இ நிர்வாகம் நடத்துகிறது.
மேலும் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்காக தனியாக மெரிட் பட்டியல் தயாராகும். அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கைக மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.