சென்னை: சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் கூடுதலாக 25 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் முதலாம் ஆண்டில் அங்கு 100 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியும்.
சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 75 மாணவ, மாணவிகள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஆண்டுதோறும் அகில இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த குழுவினர், கல்லூரியின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், ஆய்வகம், இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்து,கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்குவர்.

இந்த நிலையில் சேலம் அரசு கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரி வந்தது. சுமார் 3 ஆண்டுகளாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து, மருத்துவ கவுன்சில் குழுவினரும் ஆய்வு செய்து, அங்கு சில குறைகளைச் சுட்டிக்காட்டி அதைச் சரி செய்யவேண்டும் என்று தெரிவி்ததனர். அந்தக் குறைகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சரிசெய்தது.
இதையடுத்து, கடந்த 2013-14ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 100-ஆக உயர்த்திக் கொள்ள தாற்காலிக அனுமதி வழங்கியது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிலிருந்து சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 100-ஆக உயர்த்திக் கொள்ள அங்கீகாரம் அளித்து இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.
இத்தகவலை கல்லூரியின் முதல்வர் மருத்துவர் என்.மோகன் தெரிவித்துவிள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் மேலும் 25 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications












