சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாண்டு வகுப்புகள் இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக் கல்லூரி (சென்னை பாரிமுனையில் உள்ளது) உள்ளன. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தேர்வுக் குழு வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
அதன்படி இந்தக் கல்லூரிகளில் 2,555 எம்பிபிஎஸ் இடங்களிலும், 100 பிடிஎஸ் இடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. மாணவர்களும் அனுமதிக் கடிதம் பெற்று சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்தனர்.
அவர்களுக்கான முதலாண்டு வகுப்புகள் இன்று கோலாகலமாகத் தொடங்கின. முதலாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரவேற்று பரிசுகளைக் கொடுத்து மகிழ்ந்தனர். இந்தக் கொண்டாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்ககம் விதித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:
மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வர வேண்டும்.
ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போன்ற ஆடைகளை மாணவர்கள், மாணவிகள் அணிந்து வரக்கூடாது. அவ்வாறு உடை அணிந்து வரும் மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவிகள் தலைமுடியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் கண்ணியத்துடன் தோற்றம் அளிக்க வேண்டும். அதனாலேயே ஆடைகளில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் "ராக்கிங்' போன்ற செயல்களில் ஈடுபட்டால் கல்லூரியில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.