சென்னை: சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவம் (பிடிஎஸ்) படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று (ஜூலை 1) தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளிடையே போட்டி நிலவுகிறது. இதற்காக பல்கலைக்கழகத்தில் ஏராளமான விண்ணப்பங்கள் விற்பனையாயின. விண்ணப்ப விற்பனை கடந்த மே 10-ஆம் தேதி தொடங்கி ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 பேரும், பிடிஎஸ் படிப்பில் 80 பேரும் தனி கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை செய்யப்பட உள்ளனர். எம்பிபிஎஸ் படிப்புக்கு 5,940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1,438 விண்ணப்பங்களும் வந்தன.
மொத்தம் 230 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.