சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு விடிய விடியோ சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தி வருகிறது. இதற்கான கவுன்சிலிங் கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இதனிடையே கடந்த ஆண்டு பிளஸ்-2வில் தேர்வான மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் எம்.பி.பி.எஸ். படிப்பில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விநியோகம் விடிய விடிய நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் மொத்தம் 2,939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது: ஓமந்தூரார் பல்நோக்கு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில், பிற்பகல் ஒரு மணி முதல், தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் அளிப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தேர்வான மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளித்தோம். இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாக வந்து சேர்க்கைக் கடிதத்தை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து இங்கு வரும் மாணவர்களுக்கு இரவு, பகலாக சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.