சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே முதல் வார இறுதியில் வினியோகிக்க மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
விடைத்தாள் திருத்தம் முடிந்தது
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தம் பணி தற்போது முடியும் நிலையில் உள்ளது.
மே முதல் வாரம் ரிசல்ட்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேதி அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாவிட்டாலும் மே 3ம் தேதியில் பொறியியல் விண்ணப்பங்கள் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு விண்ணப்பங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வழக்கமாக..
இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்பு இடங்களில் இந்தஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. வழக்கமாக பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டதும் மருத்துவ விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வரும்.
கல்லூரிகள் ரெடி
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 2172 எம்பிபிஎஸ் இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 500 ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்ப்பது, பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கான ஆயத்த வேலையில் மருத்து கல்வி இயக்ககம் இறங்கியுள்ளது.
ஒரு லட்சம் விண்ணப்பங்கள்
இதையடுத்து தற்போது விண்ணப்பங்கள் அச்சிடும் பணி நடப்பதாகவும், சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடவும் மருத்துவ கல்வி இ யக்ககம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மே முதல் வாரத்தில் மருத்துவ படிப்பு விண்ணப்பங்களை வினியோகம் செய்யவும் மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.