சென்னை: தமிழகத்தில் 2015-16 ஆம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்கு இதுவரையில் 20,000 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 383 இடங்கள் போக 2,172 இடம் உள்ளன.
அகில இந்திய மருத்துவ இடங்கள்:
இதே போல், சென்னையில் அரசு பல் மருத்துவ கல்லூரி ஒன்றும் உள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 போக 85 இடங்கள் உள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் 12 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 1,560 இடங்கள் உள்ளன.
கவுன்சிலிங் மூலம் நிரப்பல்:
நிர்வாக ஒதுக்கீடு போக 993 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
விண்ணப்ப விநியோகம்:
அந்த வகையில், 2015-2016 ஆம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் மே 11 காலை 9.30 மணியளவில் தொடங்கியது. விண்ணப்ப படிவங்கள் வரும் 28ம் தேதி வரை வழங்கப்படும்.
கடந்த வருட எண்ணிக்கை:
பி.டி.எஸ், எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு கடந்தாண்டு மொத்தம் 30,380 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில், 27,876 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்ததில் 27,907 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
40 ஆயிரம் விண்ணப்பம்:
இந்தாண்டு தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிடிஎஸ், எம்பிபிஎஸ் படிப்பிற்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் விநியோகம்:
விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் விநியோகிக்கப்படும். மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500, எஸ்சிஎஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது.
தரவரிசை பட்டியல் வெளியீடு:
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். ஜூன் 12ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது.
முதல்கட்ட கவுன்சிலிங்:
பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் தரவரிசை பட்டியல் ஒரு சில தினங்கள் தள்ளி போகலாம். அகில இந்திய அளவிலான கவுன்சலிங் அறிவிப்பு வெளியான பிறகு தமிழகத்திலும் கவுன்சலிங் நடைபெறும். இதன் படி ஜூன் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெற வாய்ப்பு உள்ளது.
வேண்டுகோள் படிவம்:
மாணவர்கள் விண்ணப்பம் பெறுவதற்காக சமர்பிக்கப்படும் வேண்டுகோள் படிவத்தை டிடியுடன் இணைத்து தர வேண்டும். இந்த வேண்டுகோள் படிவத்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் சிலர் ரூபாய் 10 பெற்றுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.