சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,172 எம்பிபிஎஸ் இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர மே 28 வரை விண்ணப்பங்களைப் பெறலாம், மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கத்தில் வழங்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கிடைக்கும். மேலும் சென்னையில் தமிழ்நாடு அரசு பல்மருத்துவ கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
விண்ணப்பம் விநியோகம் 19 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரியில் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை வழங்கப்படும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர்,தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படும். மற்ற பிரிவினருக்கு ரூபாய் 500 கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்ப கட்டணத்தை "செயலாளர், மருத்துவ தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை 10" என்ற முகவரிக்கு வரைவோலை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
www.tnhealth.org மற்றும் www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.