சென்னை : 1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஜூலை 2ந் தேதி தேர்வு நடக்கிறது. அத்தேர்வுக்கு இன்று (புதன் கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வருகிற 30ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் தரம் உயரப்படுவதையொட்டி 1663 முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
எனவே, அந்த இடங்களுக்கு தகுதியான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து கொடுக்க பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரியம்
இதையொட்டி ஆசிரியர்களை தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று (புதன் கிழமை) முதல் ஆனலைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trbonlineexams.in இணைப்பினை பயன்படுத்தி இணைவழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 30ந் தி கடைசி நாளாகும்.
போட்டி எழுத்துத் தேர்வு
பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டி எழுத்துத் தேர்வு ஜூலை 2ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். 150 கொள்குறி (அப்ஜெக்டிவ்) வினாக்கள் கேட்கப்படும்.
தேர்வு முடிவுகள்
முக்கிய பாடத்தில் இருந்து 110 கேள்விகளும், கல்வி பயிற்று முறையில் இருந்து 30 கேள்விகளும், பொது அறிவில் இருந்து 10 கேள்விகளும் என்று மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
பாடவாரியாக பணியிடங்கள்
தமிழ் பாடடத்திற்கு 218, ஆங்கில பாடத்திற்கு 231, கணித பாடத்திற்கு 180, இயற்பியல் பாடத்திற்கு 176, வேதியியல் பாடத்திற்கு 168, தாவரவியல் பாடத்திற்கு 87, விலங்கியல் பாடத்திற்கு 102, வரலாறு பாடத்திற்கு 146, புவியியல் பாடத்திற்கு 18, பொருளாதாரம் பாடத்திற்கு 139, வணிகவியல் பாடத்திற்கு 125, அரசியல் அறிவியல் பாடத்திற்கு 24, நுண் வேதியியல் பாடத்திற்கு 1, மைக்கேரா பயாலஜி பாடத்திற்கு 1, மனை அறிவியல் பாடத்திற்கு 7, தெலுங்கு பாடத்திற்கு 1 மற்றும் உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1க்கு 39 என பாடவாரியாக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த பணியிடங்கள் 1663 என அறிவிக்கப்பட்டுள்ளது.