சென்னை: இந்தியா வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜக்கர்பெர்க் டெல்லி ஐஐடி மாணவர்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார், அதே நேரத்தில் மாணவர்கள் கேட்ட அறிவுபூர்வமான கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து அசத்தினார்.
இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார் மார்க் ஜக்கர்பெர்க். இதைத் தொடர்ந்து டெல்லி ஐஐடி-யில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
தற்போது இணையச் சமநிலைக் கொள்கை உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதுதொடர்பான கேள்விகளை ஐஐடி மாணவர்கள் எழுப்பியபோது இணையதளப் பயன்பாட்டில், எந்த வலைதளத்தையும் கட்டுப்படுத்தாத வகையிலான "இணையச் சமநிலை' கொள்கைக்கு ஃபேஸ்புக் நிறுவனம் முழு ஆதரவு அளிக்கிறது என்றார் மார்க்.
அதேவேளையில், குறைந்தபட்ச கட்டணமில்லா இணையச் சேவைகளையும் ஆதரிக்கிறோம் என்றார் அவர்.
மேலும் அவர் பேசியதாவது:
வாடிக்கையாளர்களுக்கு இணையதளச் சேவையை வழங்குவதற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் கோடிக் கணக்கான ரூபாயை செலவு செய்கின்றன. ஒவ்வொருவருக்கும் இணையதளச் சேவையை இலவசமாக வழங்குவதற்கு மிகவும் அதிகமான தொகை செலவாகும்.
எனினும், குறைந்த அலைவரிசையில் அடிப்படை இணையதளச் சேவையை இலவசமாக வழங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்காக, சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் "இன்டர்நெட்.ஆர்க்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளோம். வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகளில் உள்ளவர்களும் இணையதளச் சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
"இன்டர்நெட். ஆர்க்' அமைப்பின் மூலமாக, 24க்கும் மேற்பட்ட நாடுகளில், 1.5 கோடிப் பேர் இலவச இணையதள சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 10 லட்சம் பேர் இலவச இணையதளச் சேவையைப் பெறுகின்றனர் என்றார் அவர்.
ஃபேஸ்புக் தொடர்பாக மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் ஜாலியாக பதிலளித்தார். கல்லூரி மாணவரைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும் மார்க்கின் பதில்களும் கல்லூரி மாணவர் அளிப்பது போலவே இருந்ததாக டெல்லி ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர்.