சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்காக இலவசப் பயிற்சியை அளிக்கவுள்ளது சென்னையிலுள்ள மனித நேய மையம்.
சென்னை மேயர்
இந்த மையத்தைத் தொடங்கி நடத்தி வருபவர் சென்னை மாநகராட்சி மேயராக உள்ள சைதை துரைசாமி. இந்த மையம் மூலம் ஏராளமான மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ்-களாக உருவாகியுள்ளனர்.
இலவச பயிற்சி
ஏழை மாணவர்களுக்கு பல கட்டங்களாக இலவசப் பயிற்சியையும் இந்த மையம் அளித்து வருகிறது.
விண்ணப்பிக்கலாம்
இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சியை அளிக்கவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனித நேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்நிலைத் தேர்வு
மத்திய அரசு தேர்வாணையத்தால்(யுபிஎஸ்சி) கடந்த ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில், மனிதநேய பயிற்சி மையத்தில் 127 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.
54 மாணவிகள்
இதில், 54 மாணவிகள், 73 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி
இந்த முதல்நிலை தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும், முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.
பிற மாணவர்களும் பங்கேற்கலாம்
மனிதநேயத்தில் பயிற்சி பெறாத பிற மாணவர்களும் இப்பயிற்சியில் கலந்து பயன்பெறலாம்.
அலுவலகத்துக்கு வரலாம்...
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள், தங்களுடைய ‘பாஸ்போர்ட்' அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் சென்னை சி.ஐ.டி.நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மைய அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
அனைவருக்கும் இலவசம்
முதன்மை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
தேவையான வசதிகள்
இந்த எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் அனைத்து தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி, தினசரி செய்திதாள்கள் (தமிழ், ஆங்கிலம்), பாட குறிப்புகள் போன்ற வசதிகள் அனைத்தும் இலவசமாக செய்து தரப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.