சென்னை : சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு நுழைவுத் தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் 7ந்தேதி நடக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேய பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வு உள்பட மத்திய மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வருகிறது.
2018ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் 30ந் தேதி நாளை நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது.
நுழைவுத் தேர்வு
ஆனால் நுழைவுத் தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டு கோள் விடுத்தனர்.
புதிய விண்ணப்பம்
மாணவ-மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதைதுரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத் தேர்வை 7ந் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார். மேலும் இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.saidais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிச்சீட்டு
விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் மே 5ந் தேதியாகும். ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை www.saidais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெற வேண்டும்.
அடையாள அட்டை
அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். இந்த தகவல்களை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












