சென்னை : ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை சைதை துரைசாமி மனித நேய மையம் நடத்துகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சைதை துரைசாமியால் நடத்தப்படும் மனித நேய மையத்தில் மத்திய மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக இலவசப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
2,838 பேர் இதுவரை மனித நேயப் பயிற்சி மையத்தில் பயிற்சிப்பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பல்வேறு அரசுச் சார்ந்த துறைகளில் பணியாற்றுகிறார்கள். மனித நேய மையத்தைச் சார்ந்தவர்கள் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ் & ஐ.பி.எஸ் முதல்நிலைத் தேர்வு
தற்போது மனித நேயப் பயிற்சி மையத்தில் 2018ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான இலவச வகுப்புகள் உடனடியாக தொடங்கி 2018ம் ஆண்டு மே மாதம் வரை நடத்தப்பட உள்ளன.
இலவச பயிற்சி
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இலவச பயிற்சிகள் கொடுக்கப்படும்.
32 மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான இலவச வகுப்புக்களில் கலந்து கொள்வதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 30ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
நுழைவுத் தேர்வு தகுதிகள்
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 80%க்கு மேல் மார்க் எடுத்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் அவர்களும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 80%க்கு மேல் பள்ளிப்படிப்பில் மார்க் பெற்றவர்கள் கட்டாயம் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்
நுழைவுத் தேர்விற்கு அனைத்து மாணவர்களும் எளிதில் எழுதக் கூடிய வகையிலேயே கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவுச் சார்ந்த கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும். மேலும் நுழைவுத் தேர்வில் மாணவ மாணவியர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இலவச பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்
சைதைதுரைசாமி மனித நேய மையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் நுழைவுத் தேர்வினைக் கட்டாயம் எழுத வேண்டும்.
நுழைவுத் தேர்வு எழுத விரும்புபவர்கள் www.saidais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.
கடைசி தேதி மற்றும் நுழைவுச் சீட்டு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21.04.2017ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
22.04.2017ம் தேதியில் இருந்து மாணவ மாணவியர்கள் தங்கள் நுழைவுச் சீட்டினை www.saidais.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
அடையாள அட்டை
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த நுழைவுச்சீட்டில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அதில் அரசு அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று நுழைவுத் தேர்விற்கு செல்லும் நாளில் கொண்டு செல்ல வேண்டும். அரசு அலுவலரிடம் கையொப்பம் பெறமுடியாதவர்கள் தங்கள் அடையாள அட்டையினை நுழைவுச் சீட்டுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் தொடர்புக்கு - 24358373, 9840106162 என்ற தொலைபேசி எண்களை அனுகவும்.