புதுடெல்லி: ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடன் விவகாரம் பாடமாக்கப்படவுள்ளது.
சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடனை இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கி கட்டாமல் வைத்துள்ளார். இந்த விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாடமாக வைக்க ஐஐஎம் ஆமதாபாத் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஐஐஎம்-மில் பி.ஜி. படிப்பு படிக்கும் மாணவர்கள் இது பாடமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்பொரேட் நிர்வாகம், பிராண்ட் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்தப் பாடம் விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கியில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோல லக்னோ, பெங்களூர், இந்தூர் ஐஐஎம்-களிலும் இது பாடமாக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான முடிவை ஐஐஎம் நிர்வாகம் விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.