மஹாராஷ்டிர மாநிலம் மிரா சாலையில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கொட்டாவி விட்ட மாணவனை அறைந்த, பள்ளி தலைமை ஆசிரியை மீது, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நயாநகர் ஆய்வாளர் பாலாஜி கூறுகையில்,
பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலை இறைவணக்கத்தின் போது அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கொட்டாவி விட்டுள்ளார். இதைக் கண்ட தலைமை ஆசிரியை, மாணவனை கண்டித்ததோடு, கன்னத்தில் அறைந்துள்ளார். வீடு திரும்பிய மாணவன் இந்த விவகாரத்தை, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, தலைமை ஆசிரியர் மீது சட்டப் பிரிவு 323 கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஜூன் 19 ஆம் தேதி ஸ்கூல் புக் எடுத்து வர மறந்த காரணத்தால் இதே மாணவனுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டதாகவும் இதனால் மாணவன் பள்ளி செல்ல மறுப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளதாகவும் பாலாஜி கூறினர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலாஜி தெரிவித்தார்.