மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியார் நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒன்றிணைந்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்காக தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. தற்போது மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை மகாராஷ்டிர மாநில அரசு நடத்தி வருகிறது. மகாராஷ்டிர சிஇடி மையம் இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறது.
இதை எதிர்த்தே தனியார் மருத்துவக் கல்லூரிகளும், அரசு மானியம் பெறாத மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்கு தொடுத்தன.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வை நடத்தக்கூடாது என்றும், மகாராஷ்டிர சிஇடி செல் நடத்தும் தேர்விலேயே மாணவர்கள் பங்கேற்கவேண்டும் என்றும் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்த வழக்கு பி.ஜி. படிப்புகளுக்காக போடப்பட்டாலும், தற்போது அனைத்து விதமான மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கும் சேர்த்தே தீர்ப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.