விண்வெளித் துறையில் இந்தியாவை உலகம் அறியச் செய்தவர்களில் தமிழர்களின் பங்கு மகத்தானது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், சிவதாணுப்பிள்ளை, கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை என ஒட்டுமொத்த விண்வெளித்துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்தவர்கள் இந்த தமிழர்கள்.
அந்த வரிசையில் தற்போது புதிதாக ஓர் தமிழ் மங்கை விண்வெளித் துறையை ஆளுமை செய்ய தன்னை தயார் படுத்தி வருகிறார். ஆமாம், அதற்கான முயற்சியால் தற்போது மதுரையைச் சேர்ந்த மாணவி அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குச் செல்ல தேர்வாகியுள்ளார்.
கோ 4 குரு (go4guru)
விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் இத்துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பல போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, தற்போது www.go4guru.com என்னும் வலைத்தளத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சர்வதேச விண்வெளி அறிவியல் மாணவர்கள்
சர்வதேச அளவிலிருந்து மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தான்யா தஷ்னம் உள்ளிட்ட மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் நாசாவிற்கு சென்று ஒருவார காலம் தங்கி விண்வெளி குறித்தான அறிவியலைக் கற்க உள்ளனர்.
மதுரை டீக்கடை
மதுரையை அடுத்த கள்ளந்திரியைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான் தான்யா தஷ்னம் (வயது 15). இவர் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் சிக்கந்தர் ஜாபர், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
அறிவியலில் ஆர்வம்
தான்யா தஷ்னம் அறிவியல் பாடத்தில் அதீத அதிக ஆர்வம் கொண்டவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தீவிர ரசிகையான தான்யா தஷ்னம் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவோடு அறிவியல் பாடத்தை ஆர்வத்தோடு படித்து வருபவர். குறிப்பாக, அவருக்கு பிடித்த பாடமும் அறிவியல் என்பதால் www.go4guru.com என்ற வலைதளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார்.
மூன்று பேர்
நாசாவின் இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்ற தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேர் வெற்றி பெற்றனர். ஆந்திராவைச் சேர்ந்த மாணவி சாய்புஜிதா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் அலிபக் ஆகியோரும் விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நாசா
தான்யா தஷ்னம் உள்ளிட்ட மூன்று பேரும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் ஒருவாரம் தங்கி அங்கே நடைபெறும் ஆய்வுகளை காண உள்ளனர். அங்குள்ள ஆய்வகத்தைச் சுற்றிப்பார்க்கும் இவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் உள்ளனர்.
நாசா ஆய்வு மைய விண்வெளி வீரர்
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நாசா ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரர் டான்தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவி
நாசா செல்லும் வாய்ப்பை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவி மதுரை கள்ளந்திரியைச் சேர்ந்த தான்யா தஷ்னம் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடம் விருப்பமான ஒன்றாக உள்ளது. 5-வது படிக்கும்போதே விஞ்ஞானியாக வேண்டும், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்த கனவு 10-வது படிக்கும் இந்த நேரத்தில் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அப்துல்கலாம் தான் உத்வேகம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் எனது உத்வேகம். அவரை போல விஞ்ஞானியாகி இந்த நாட்டுக்கு சேவையாற்றுவது தான் எனது லட்சியம். அதற்கு நாசா பயணம் எனக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.