கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதை அடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் சமீபத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளியில் நேரடி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே வேலையில், மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சில பள்ளிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களைத் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல்வஹாதீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், தமிழக அரசு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசி இல்லை
இதில், கல்லூரி மாணவர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தாமல் நேரடி வகுப்புகளுக்கு செல்வதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளைப் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எதன் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை
கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆன்லைன் வகுப்புகளை நன்றாக பழகிவிட்டனர். இந்த நிலையில், 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், கல்லூரிகளைத் திறந்த முடிவும் ஏற்கத்தக்கதல்ல. கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கி உள்ளதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள்
இந்த நிலையில் திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேரடி வகுப்பிற்கு மாணவர்கள் வர பல்வேறு பள்ளிகளில் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது. எனவே பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மற்றொரு மனுவை மனுதாரர் தாக்கல் செய்தார்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்று
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 1-ந்தேதி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்பின் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் பல பள்ளிகளில் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வருமாறு வற்புறுத்தப்படுவதாக மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முழுமையான ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசிற்கு உத்தரவு
இதனை விசாரித்த நீதிபதிகள், கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடலாம் எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு முதன்மை செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.