சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகத் தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த அப்பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமீப காலமாக நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக் கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், கல்வி என அனைத்து நிலைகளும் பாதிக்கத் தொடங்கியிருப்பதாகப் பேராசிரியர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிதி நெருக்கடி காரணமாக, இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அதோடு பேராசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களைப் பன்மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுத்தன. ஆனால், அதற்கு அரசும், ஆளுநரும் ஒப்புதல் தராத காரணத்தினால் தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தத் தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.
தற்போது, தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை தாள் ஒன்றுக்கு ரூ.60 என்றிருந்ததை ரூ. 120- ஆக உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதேப் போன்று எம்.பி.ஏ. படிப்புக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ. 400 என்ற அளவிலிருந்து ரூ. 500-ஆகவும், எம்.எஸ்சி.-ஐடி தேர்வுக் கட்டணத்தை தாள் ஒன்றுக்கு ரூ. 175-லிருந்து ரூ.360-ஆகவும் உயர்த்த உள்ளது.
பி.எட். படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100 என்ற அளவிலிருந்து ரூ. 360-ஆக உயர்த்தப்பட உள்ளது. பிற முதுநிலை படிப்புகளுக்கான கட்டணம் ரூ. 200-லிருந்து ரூ.300-ஆகவும், செய்முறை திட்டங்களுக்கான கட்டணம் ரூ. 120-லிருந்து ரூ.150-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:-
பல்கலைக் கழகத்தின் நிதிநிலையைச் சரிசெய்வதற்காகப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த உயர்வு, பிற பல்கலைக்கழகங்களில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைவிடக் குறைவுதான். பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள ஆட்சிக் குழுவில் இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி பெறப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.