சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக்கல்வி இளநிலை பட்டப் படிப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக்கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இதற்கான முடிவுகள் நாளை சென்னைப்பல்கலைக் கழக இணைய தளத்தில் வெளியாகிறது.
தேர்வு எழுதிய மாணவர்கள் இணைய தளத்தில் நாளை இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதில் ஏ12, 13,சி 12, 13, 14 ஆகிய தேர்வு பதிவு எண்களை கொண்ட மாணவர்கள் தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்றுக்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லாத மாணவர்கள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இரண்டுக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மார்ச் 11ம் தேதி இறுதி நாள் என பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.