சென்னை: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
எம்பிபிஎஸ்.,பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. இதனால், மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்தாண்டு 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த ஆண்டு பிளஸ் டூ முடித்த மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பில் சேரும் நிலை ஏற்பட் டுள்ளது.
இதை எதிர்த்து உயர் நீதிமன் றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முறையே 2710, 1693, 652 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் 124 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தாண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முறையே 124, 1049, 387 மாணவர்கள் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்கள் 2808. ஆனால், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற 4,679 பேர் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்தாண்டு நடத்தப்படும் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் கடந்தாண்டு மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், தனது உத்தரவில் "மருந்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பழைய மாணவர்கள் கலந்துகொள்வது இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும்" கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்மன்றத்தில் நீதிபதிகள் திரு.அக்னிஹோத்ரி, திரு.வேணுகோபால் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்தால் ஏராளமான பிரச்சினைகளும், குழப்பமும் ஏற்படும். எனவே, தடை விதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்தினாலும், ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்த விவகாரத்தில் அரசின் நிலை குறித்து கேட்டு வெள்ளிக்கிழமை தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெரனல் ஆஜராகி, ‘கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற 548 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வியில் இடம் கிடைக்கும். நடைபெறும் மருத்துவ கல்வி கவுன்சிலில் 4,679 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அரசை பொருத்தவரை 17 வயதை கடந்த பிளஸ்2 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை நடத்தலாம். ஆனால், இந்த வழக்கு முடியும் வரை மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கக்கூடாது என்று கூறி விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.