இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப் பணியிடங்கள், 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை இத்தேர்வை சென்னை உயர்நீதிமன்றம் நடத்தி வந்தது. எனினும் டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றமே பங்கு வகித்து வருகிறது..

இந்நிலையில் 245 சிவில் நீதிபதி பதவிகான 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த தேர்வை எழுத பல ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 32 மையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வெளியானது.இதில் 2,544 பேர் அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றார்கள். இதையடுத்து, சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நடந்தது.. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடந்தது.
நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் சிவில் நீதிபதிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தற்காலிக தேர்வு பட்டியலை கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்நிலையில் 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு தேர்வானவர்களின் தற்காலிக தேர்வு பட்டியலைசென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை2 வாரத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டியலில் பின்னடைவு மற்றும் தற்போதைய புதிய பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறி, பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் விதமாக, சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, அந்த பட்டியலை ரத்து செய்கிறோம். ஏற்கெனவே உள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்த்தும், மற்றவர்களை உரிய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும், புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி 2 வாரங்களில் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேர்வான 245 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. பதவி கிடைத்த நிலையில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் தற்போது நீதிமன்ற அறிவிப்பால் குழப்பம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












