சென்னையில் இன்று (ஜனவரி 11) நடைபெறவிருந்த அரசு செவிலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தமிழ்நாடு சுகாதாரத் துறை ஊழியர்கள் நலச் சங்கச் செயலாளர் கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கூறியிருப்பதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) காலை 10.30 மணியளவில் அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைத் துறை இயக்குநர் கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று அறிவிப்பாணை வெளியிட்டார்.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் செவிலியர்கள், தற்போது பணிபுரியும் இடத்தில் சேவைச் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மிகக் குறுகிய கால அவகாசமே இருப்பதால் சேவைச் சான்றிதழ் பெறமுடியாமல் செவிலியர்கள், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன என்பன குறித்த எவ்வித தகவலும் இன்றி கலந்தாய்வு அறிவிப்பாணை அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர் கலந்தாய்வு குறித்து 2007-இல் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. மேலும், இதுகுறித்த தகவல் முன்கூட்டியே செவிலியர்களுக்குத் தெரிந்துள்ளதால் முறைகேடு நடைபெறவும் வாய்ப்புள்ளது.
எனவே, செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டத்தை பலத்த கண்காணிப்போடு நடத்த வேண்டும். ஜனவரி 7 அன்று மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைத் துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுப்பிரமணியன், இன்று நடைபெறவிருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.