சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் ஆராய்ச்சி இருக்கையை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷனும்(எம்எஸ்எஸ்ஆர்எஃப்), ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸும் (கேஐஎஸ்எஸ்) முடிவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும், கேஐஎஸ்எஸ் நிறுவனத் தலைவரும். வேந்தருமான டாக்டர் அச்சுதா சமந்தாவும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒரு தனியார் கல்வி நிறுவனத்துடன் எம்எஸ்எஸ்ஆர்எஃப் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த ஒப்பந்தத்தின்மூலம் நாட்டிலுள்ள ஆதரவற்ற மாணவர்களின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படும்.
பல் உயிர்ப் பெருக்கம், மாறிவரும் சீதோஷ்ண நிலை உள்ளிட்டவை தொடர்பாக கேஐஎஸ்எஸ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதுமட்டுமல்லாமல் இந்த ஆராய்ச்சி இருக்கை மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளையும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேஷன் மேற்கொள்ளவுள்ளது.
இதுகுறித்து எம்.எஸ். சுவாமிநாதன் கூறியதாவது: கேஐஎஸ்எஸ், கேஐஐடி என்ற இரு மாபெரும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி டாக்டர் அச்சுதா சமந்தாவின் சாதனையை நான் பாராட்டுகிறேன். அவருடைய சாதனைகளுக்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டின் பெரும் எதிரியாக இருப்பது பசி. அதை விரட்டுவதற்கு இந்த இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயலாற்றும் என்றார் அவர்.