கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுவதுமாக முடக்கப்பட்டன. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஆண்ட மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. இதில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் அடங்கும். தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆன்லைன் வகுப்புகள்
ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடைபெற்றன.
தேர்வின்றி தேர்ச்சியான மாணவர்கள்
கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடுமையாக இருந்ததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள்
அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு சார்ந்தவை என அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டன.
பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு கொரோனா
தற்போது, 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தினமும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கத்தினால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தலைதூக்கும் கொரோனா
இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் தமிழகத்தில் 5,450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீண்டும் ஊரடங்கு அமலா?
நாடு முழுவதும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் பெரும்பாலான மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக, மார்ச் 17ம் தேதியன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில், தடுப்பூசி செயல்முறை குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் பேசப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு?
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாள் ஒன்றிற்கு 1000 பேர் வரையில் இந்நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தேர்தலால் அதிகரிக்கும் கொரோனா
திருமண நிகழ்ச்சி, அரசியல் பொதுக் கூட்டம், தேர்தல் பிரச்சாரம் என மக்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்று வருவதால் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
வதந்திகளை நம்பாதீர்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்ற தகவலை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.