தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் படித்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளைத் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசுத் தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து 933 குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளைத் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்குச் சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மாணவர்களுக்கு, நான்கு ஜோடி சீருடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.